செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

Published On 2020-10-17 04:01 GMT   |   Update On 2020-10-17 04:01 GMT
முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதையொட்டி, அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:

தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது. இதற்கிடையே தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் 128.35 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று ஒரு அடி உயர்ந்து 129.25 இருந்தது. நீர்மட்டம் உயர்ந்து வருவதையொட்டி, அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வினாடிக்கு 1,400 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, நேற்று 1,700 கன அடியாக அதிகரிக்கப்பட்டு திறந்துவிடப்படுகிறது. தற்போது அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 779 கனஅடி வீதம் நீர்வரத்து உள்ளது. அணையில் நீர் இருப்பு 4 ஆயிரத்து 536 மில்லியன் கனஅடியாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் நேற்று முதல் மீண்டும் 4 ஜெனரேட்டர் மூலம் 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை 3 ஜெனரேட்டர் மூலம் 126 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News