உள்ளூர் செய்திகள்
நடராஜர்சிவகாமி அம்மையார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் இன்று நடராஜர் தரிசனம், வசந்த உற்சவம்

Published On 2022-04-17 11:02 GMT   |   Update On 2022-04-17 11:02 GMT
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் இன்று நடராஜர் தரிசனம், வசந்த உற்சவம் நடைபெற்றது.
சேலம்:

சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள கரபுரநாதர் சாமி கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா கடந்த 13ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 
அதன்பிறகு 14ந் தேதி காலையில் கொடியேற்றம், 11 மணிக்கு தேர் கலசம் வைத்தல், அதை தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது. 

நேற்று முன்தினம் காலை பிச்சாண்டவர் உற்சவமும், அதன்பிறகு மாலை திருக்கல்யாணமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா நேற்று மாலை நடந்தது. இதையொட்டி காலையில் அம்பாள், சோமஸ் கந்தருக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், மதியம் 12 மணிக்கு பவுர்ணமி பூஜையும் நடைபெற்றது. 

பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாளுடன் சோமஸ் கந்தர் எழுந்தருளினார். இதையடுத்து கோவில் வெளிப்புறத்தில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தேருக்கு முன்பு சிறிய தேரில் விநாயகர் ஊர்வலம் சென்றது.

இதையடுத்து மூலவர் கரபுரநாதர் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

இந்த தேரோட்ட விழாவில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., விழா குழுவினரான ஒன்றியக்குழு உறுப்பினர் பாரப்பட்டி சுரேஷ்குமார், முன்னாள் வேளாண்மைதுறை அமைச்சரின் உதவியாளர் சேகர், வீரபாண்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெண்ணிலா சேகர், ஒன்றிய குழு உறுப்பினர் மலர்விழி செந்தில் ஆனந்த், உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், பனமரத்துப்பட்டி ராஜா, கோவில் செயல் அலுவலர் சங்கர், தக்கார் புனிதராஜ், எழுத்தர் சேட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடராஜர் தரிசனம், வசந்த உற்சவம், கொடி இறங்குதல், பாலிகை விடுதல் நடைபெற்றது. 

மாலை 6 மணிக்கு காலபைரவர் பூஜை, இரவு 7 மணிக்கு சத்தாபரணம் நடைபெறுகிறது. சத்தாபரணம் நிகழ்ச்சியில் அலங்கரிப்பட்ட ரதத்தில் சவுந்தரவள்ளிசந்திர சேகரர் சாமிகள் திருவீதி உலா நடைபெறுகிறது.

நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை மஞ்சள் நீர் உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News