ஆன்மிகம்
கள்ளழகர் கோவில்

கள்ளழகர் கோவில் தெப்பத் திருவிழா 27-ந்தேதி நடக்கிறது

Published On 2021-02-23 08:50 GMT   |   Update On 2021-02-23 08:50 GMT
கள்ளழகர் கோவில் தெப்பத் திருவிழா வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதைதொடர்ந்து அதே பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி வந்த வழியாக சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேரும்.
மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பவுர்ணமி நிறை நாளில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி வருகிற 26-ந் தேதி மாலையில் 6 மணிக்கு கஜேந்திர மோட்சம் நடைபெறும்.

27-ந் தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் ஸ்ரீதேவி பூதேவி, சமேத சுந்தர ராச பெருமாள் என்ற கள்ளழகர் பல்லக்கில் புறப்பாடாகி செல்கிறார். மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் வழி நெடுகிலும் சேவை சாதித்து மண்டூக தீர்த்தம் எனும் பொய்கைகரைபட்டி புஷ்கரணிக்கு செல்கிறார்.

அங்கு காலை 10.30 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் தெப்பம் சென்று அலங்கார மண்டபத்தில் தேவியர்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதைதொடர்ந்து அதே பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி வந்த வழியாக சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேரும். இத்துடன் தெப்ப உற்சவம் நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News