செய்திகள்
ஈரோடு வ.உ.சி.பூங்காவில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் சேறும்-சகதியுமாக காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

வ.உ.சி. பூங்காவில் சேறும் சகதியுமாக மாறிய காய்கறி மார்க்கெட் - வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

Published On 2020-07-10 11:42 GMT   |   Update On 2020-07-10 11:42 GMT
ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
ஈரோடு:

கொரோனா ஊரடங்கு காரணமாக ஈரோடு பஸ் நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் கடந்த 2-ந்தேதி முதல் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு ரூ.1 கோடி செலவில் 808 காய்கறி மற்றும் பழக்கடைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை சில்லறை வியாபாரமும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல் வ.உ.சி. பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி மார்க்கெட்டிலும் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது.

இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள் சகதியில் சிக்கிக்கொண்டது. பின்னர் கூலி தொழிலாளர்கள் சரக்கு வாகனத்தில் இருந்த காய்கறிகளை இறக்கிவிட்டு பின்னர் வாகனத்தை சகதியில் இருந்து மீட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் வாங்க வந்த வியாபாரிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டனர். வ.உ.சி. பூங்கா மைதானம் சேறும், சகதியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர். இதன் காரணமாக நேற்று முன்தினத்தைவிட நேற்று மார்க்கெட்டில் மக்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது.
Tags:    

Similar News