செய்திகள்
மா.சுப்பிரமணியன்

நெருக்கடியான நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்கும் மா.சுப்பிரமணியன்

Published On 2021-05-06 13:01 GMT   |   Update On 2021-05-06 13:01 GMT
சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரான மா.சுப்ரமணியன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்.
சென்னை:

தமிழகத்தில் நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்க உள்ளது. மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவி வரும் நெருக்கடியான இந்த காலகட்டத்தில், மா.சுப்பிரமணியனுக்கு முக்கியமான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 

மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது உயர் கல்வியை நிறைவு செய்தார். பின்னர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பையும் பெங்களூர் ஹெவனூர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் (எல்.எல்.பி) முடித்தார்.

1976 ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்த மா.சுப்பிரமணியன் 1996-2006 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி அவைத்தலைவராக இருந்தார். திமுக இளைஞர் அணியின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் இவர், கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான தலைவர் ஆவார். 



உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சி செய்தல், திரைப்படங்கள், யோகா போன்றவற்றில் ஆர்வம்  கொண்ட இவர், ஏராளமான மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 

2006-2011 காலகட்டத்தில் சென்னை மாநகர மேயராக பணியாற்றிய மா.சுப்பிரமணியன், பல்வேறு திட்டப்பணிகளை செய்தார். அவரது பணி பலராலும் பாராட்டப்பட்டது. மீண்டும் 2011 இல் நடந்த மேயர் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் அதிமுகவின் சைதை சா.துரைசாமியிடம் தோல்வியடைந்தார். 

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது முறையாக சைதாப்பேட்டை தொகுதி மக்கள், மா.சுப்பிரமணியனை தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சுகாதாரத்துறை அமைச்சராக நாளை பதவியேற்க உள்ள மா.சுப்பிரமணியனுக்கு மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
Tags:    

Similar News