ஆன்மிகம்
நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மணல்வெளியில் வையாளி வகையறா கண்டருளிய காட்சி.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி

Published On 2020-01-14 05:18 GMT   |   Update On 2020-01-14 05:18 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளினார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி ராப்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது. 8-ம் நாளான நேற்று திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் கோவிலின் நாலாம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல்வெளியில் நடைபெற்றது.

திருமாலுக்கு தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், தனது பெருமாள் கைங்கர்யம் தொடர வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தார். அவரை தடுத்தாட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிதுநேரம் விளையாட்டுக்காட்டி, பின்னர் அவரது காதில் ஓம்நமோ நாராயணாய எனும் மந்திரத்தை தானே உபதேசித்து, ஆட்கொண்ட விதமே வேடுபறி வைபவமாகும்.

இதையொட்டி மாலை 4.30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு, மணல்வெளிக்கு சென்றார். அங்கு நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் மணல்வெளியில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார். இந்த காட்சியை திரளான பக்தர்கள் பரவசத்தோடு கண்டு நம்பெருமாளை வணங்கினர். மாலை 5.15 மணி முதல் மாலை 6.15 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து திருமங்கை மன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் குடும்பத்தினர் மற்றும் அவர்தம் உறவினர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைந்தார். அங்கு இரவு 8.15 மணி முதல் இரவு 10.30 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன் பொதுஜனசேவையும் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

விழாவின் 10-ம் நாளான நாளை(புதன்கிழமை) தீர்த்தவாரியும், 16-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெற்று, இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News