செய்திகள்
அந்தியூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள குப்பாண்டபாளையத்தார் தோட்டம் நகலூரை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 45). விவசாயி. அவருடைய மனைவி அன்னபூரணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் வீரக்குமாரின் மூத்த மகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் அவர் தன்னுடைய மகள் தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாரே என மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து வீரக்குமார் மயங்கி விழுந்து உள்ளார். இதனிடையே வெளியில் சென்றிருந்த அன்னபூரணி வீட்டுக்கு வந்தார். அப்போது விஷம் குடித்து கணவர் வீரக்குமார் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வீரக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.