செய்திகள்
குமாரவேலு

சிறுமிக்கு பாலியல் தொல்லை- போலீஸ்காரர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

Published On 2021-10-20 02:56 GMT   |   Update On 2021-10-20 02:56 GMT
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் கைது செய்யப்பட்டார்.
பாகூர்:

புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு வடக்கு பகுதியை சேர்ந்தவர் குமாரவேலு (வயது 32). இவர் புதுவை ஐ.ஆர்.பி.என். பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் குமாரவேலுக்கும், திருமணமான பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதனால் குமாரவேலு அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு 11 வயதில் மகள் உள்ளார். அந்த சிறுமிக்கும், குமாரவேலு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்தும், அதை அவர் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து சிறுமியின் தந்தை விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது குமாரவேலு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவரத்தை சிறுமி தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, அரியாங்குப்பத்தில் உள்ள குழந்தைகள் நல ஆணையத்திடம் புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர்கள், தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு, குமாரவேலு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குமாரவேலு மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக கூறி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News