பதவி பறிக்கப்பட்டதால் கட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட அமமுக நிர்வாகி
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சி 4-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அ.ம.மு.க கட்சியில் வார்டு செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சி தலைமை வெளியிட்ட அறிவிப்பில் இவரது பதவி பறிக்கப்பட்டு அதேபகுதியை சேர்ந்த மற்றொருவருக்கு வழங்கப்பட்டது.
இதனால் அதிருப்தியில் இருந்த சுரேஷ் ஆண்டிப்பட்டி அ.ம.மு.க கட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கையில் டி.டி.வி.தினகரன் புகைப்படம் மற்றும் குக்கர் சின்னம் ஆகியவற்றை வைத்தவாறு நீண்டநேரமாக அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அ.ம.மு.க நிர்வாகிகள் பலர் அங்கு வந்து அவரை சமாதானம் செய்தனர். சுமார் 3 மணிநேரமாக சமாதானம் செய்து வேறு பதவி பெற்றுதருவதாக உறுதி அளித்ததின்பேரில் சுரேஷ் போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.