செய்திகள்
கோப்பு படம்

அரியூர் அருகே வங்கியில் ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி - மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

Published On 2019-10-10 12:26 GMT   |   Update On 2019-10-10 12:26 GMT
வேலூர் அடுத்த அரியூர் வங்கியில் ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:

வேலூர் அடுத்த அரியூர் தனியார் ஆஸ்பத்திரி அருகே கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த 5-ந் தேதி முதல் 9-ம் தேதி வரை தசரா பண்டிகை விடுமுறையையொட்டி வங்கி அடைக்கப்பட்டிருந்தது.

இதனைப்பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வங்கியின் பின்பக்க உள்ள ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே செல்ல முயன்றுள்ளனர். ஜன்னலை முழுவதுமாக உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நேற்று வங்கிக்கு வந்த ஊழியர்கள் ஜன்னல் கம்பிகள் உடைந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர் .இதுபற்றி தகவலறிந்த வங்கி மேலாளர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார் .உடனடியாக அரியூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

மேலும் ஜன்னல் கம்பிகளில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர் .இந்த ரேகைகள் பழைய குற்றவாளியுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர் .வங்கிக் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கியில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News