செய்திகள்
நடமாடும் ரேஷன் கடைகள்

காரணைப்புதுச்சேரி, வாலாஜாபாத்தில் நடமாடும் ரேஷன் கடைகள்

Published On 2020-10-16 12:03 GMT   |   Update On 2020-10-16 12:03 GMT
காரணைப்புதுச்சேரி, வாலாஜாபாத், பள்ளிப்பட்டில் நடமாடும் ரேஷன்கடைகள் தொடங்கப்பட்டன.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் உள்ள கோகுலம் காலனி விரிவு பகுதியில் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நடமாடும் ரேஷன் கடை மூலம் பொருட்கள் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தலைமை தாங்கி நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆராமுதன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், காரணைப்புதுச்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன், கிளை செயலாளர் எஸ்.என்.ஆர்.விநாயகம், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி தீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல அ.தி.மு.க. சார்பில் காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் நடமாடும் ரேஷன் கடை தொடக்கவிழா நடைபெற்றது. இதற்கு காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வேங்கடமங்கலம் எம்.கஜா என்கிற கஜேந்திரன் தலைமை தாங்கி நடமாடும் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காரணை சண்முகம், ஒன்றிய மாணவரணி செயலாளர் காட்டூர் கன்னியப்பன், ஊராட்சி மன்ற செயலர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாலாஜாபாத் தாலுகாவில் நாயக்கன் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம், வாலாஜாபாத் பேரூராட்சி முன்சீப் தெரு, தம்மனூர், ஊராட்சி போன்ற பகுதிகளில் நடமாடும் ரேஷன்கடைகளை முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர்.

தொடக்க விழாவில் ஒன்றிய செயலாளர்கள் அக்ரி நாகராஜன், ஜீவானந்தம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தென்னேரி வரதராஜுலு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கீதாபழனி, அஞ்சாலாட்சி பிள்ளையார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கரிம்பேடு, பள்ளிப்பட்டு, ராமாபுரம் போன்ற பகுதிகளில் அம்மா நடமாடும் ரேஷன் கடைகளை எம்.எல்.ஏ. நரசிம்மன் தொடங்கி வைத்தார். இதில் பள்ளிப்பட்டு ஒன்றியக்குழு தலைவர் ஜான்சிராணி விஸ்வநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் உமாபதி, ஜெகன்நாதன், ரவி பள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஜெயவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News