செய்திகள்
கடலூரில் நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்:
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2012-ம் ஆண்டு பணியாற்றிய பருவ கால ஊழியர்களை உடனே நிரந்தரம் செய்ய வேண்டும். இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர் , உதவி மேலாளர், துணை மேலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கணினி பிரிவு ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் உத்திரகுமார், ரமேஷ், நாகப்பன், துணை செயலாளர்கள் செங்குட்டுவன், தில்லைகோவிந்தன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன், மாநில துணை தலைவர் கருப்பையன், மாவட்ட தலைவர் பழனிவேல், மண்டல செயலாளர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் நுகர்பொருள் வாணிபக்கழக பொது தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் மணிவண்ணன் நன்றி கூறினார். முன்னதாக கோரிக்கை விளக்க வாயிற்கூட்டத்தையும் நடத்தினர்.