செய்திகள்
யாருடைய தனிநபர் வாழ்வுக்கும் இடமில்லையா? சுப்ரீம் கோர்ட் வேதனை
நாட்டில் என்னதான் நடக்கிறது? யாருடைய தனிநபர் வாழ்வுக்கும் இடமில்லையா? என சுப்ரீம் கோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருபவர் முகேஷ் குப்தா. இவர் தனது தொலைபேசி மற்றும் அவரது குடும்பத்தினரின் தொலைபேசி பேச்சுக்களை மாநில அரசு ஒட்டுக் கேட்கப்படுவதாக சந்தேகப்பட்டார். இதுதொடர்பாக, முகேஷ் குப்தா சார்பில் மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் இந்திரா பானர்ஜி பெஞ்ச், நாட்டில் என்னதான் நடக்கிறது? என்னதான் வேண்டும்? யாருடைய தனிநபர் வாழ்வுக்கும் இடமில்லையா? சிலரின் தனிநபர் உரிமை இப்படிதான் மீறப்படுகிறதா? முகேஷ் குப்தாவின் தொலைபேசியை எந்த அடிப்படையில் அவருக்கே தெரியாமல் ஒட்டுக் கேட்க அனுமதி அளிக்கப்பட்டது? இதற்கு உத்தரவிட்டது யார்?" என கடுமையாக சாடினர்.
மேலும், ஐ.பி.எஸ். அதிகாரியின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க யார், என்ன காரணத்திற்காக உத்தரவிட்டது என்பது குறித்து விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி மீது போடப்பட்ட எப்.ஐ.ஆர். மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.