ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளே தங்கக்கொடி மரம் வளாக பகுதியில் அலங்காரம் செய்யப்பட்டுள்ள காட்சி.

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்: நான்கு மாடவீதிகளில் வாகன சேவை நடக்காது

Published On 2020-09-19 02:39 GMT   |   Update On 2020-09-19 02:39 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவ விழாக்கள் நடக்கிறது. அதில் முதலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று மாலை சேனாதிபதி உற்சவமும், அங்குரார்ப்பணமும் நடந்தது. அதைத்தொடர்ந்து இன்று காலை வஜ்ர கவசத்தில் திருச்சி உற்சவம் நடக்கிறது.

மாலை 6.03 மணியில் இருந்து மாலை 6.30 மணிக்குள் மீன லக்னத்தில் தங்கக்கொடி மரத்தில் பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றம் நடக்கிறது. அத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. முதல் வாகனமான பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி எழுந்தருள்கிறார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறிய சேஷ வாகனம், இரவு அன்னப்பறவை வாகனம், 21-ந்தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் வாகனம், 22-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகனம், 23-ந்தேதி காலை பல்லக்கு உற்சவத்தில் மோகினி அலங்காரம், இரவு கருட வாகனம்.

24-ந்தேதி காலை அனுமந்த வாகனம், மாலை வசந்த உற்சவம், இரவு யானை வாகனம், 25-ந்தேதி காலை சூரிய பிரபை வாகனம், இரவு சந்திர பிரபை வாகனம், 26-ந்தேதி காலை சர்வ பூபால வாகனம், இரவு குதிரை வாகனம், 27-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

24-ந்தேதி மாலை தங்கத்தேரோட்டமும், 26-ந்தேதி காலை மரத்தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக சர்வ பூபால வாகனத்தில் உற்சவர்கள் எழுந்தருள்கின்றனர். மேற்கண்ட அனைத்து வாகனங்களில் உற்சவர்கள் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். கொரோனா பரவலால் நான்கு மாடவீதிகளில் வாகன சேவை நடக்காது.

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலை முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் உள்ளே பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தங்கக்கொடி மரம், பலிபீடம் ஆகியவைகளில் பிரத்யேக மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News