செய்திகள்
உடல்களை தூக்கி வீசுவதற்கு மும்பையில் ஆறு கிடையாது: உ.பி., பீகாரை சுட்டிக்காட்டி மும்பை மேயர் பதிலடி
மும்பையில் கொரோனா தொற்றால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது என பா.ஜனதா குற்றம் சுமத்திய நிலையில், மேயர் கிண்டல் செய்துள்ளார்.
இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் கொரோனா தொற்றால் அதிகமானோர் உயிரழந்துள்ளனர். ஆனால் அரசு எண்ணிக்கையை குறைத்து காட்டுகிறது என்று பா.ஜனதா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் மும்பை மேயர் கிஷோரி பெட்நேகர் ஆற்றுக்குள் உடல்களை தூக்கி வீசிவிட்டு, எண்ணிக்கையை மறைக்க உத்தர பிரதேசம், பீகாரை போன்று மும்பையில் ஆறு ஓடவில்லை என்று பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கிஷோரி பெட்நேகர் கூறுகையில் ‘‘மும்பையில் எந்தவிதமாக தரவுகளும் மறைக்கப்படவில்லை. கொரோனா தொற்றால் உயிரழந்தவர்களின் உடல்களை தூக்கி எறிவதற்கு மும்பையில் ஆறு ஏதும் இல்லை. மும்பையில் உயிரழப்பவர்களின் பதிவுகள் மூன்று இடங்களில் பதிவு செய்யப்படுகிறது. ஆகவே, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க முடியாது’’ என்றார்.
உத்தர பிரதேசம், பீகாரில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும்போது கங்கை ஆற்றின் கரையோரம் ஏராளமான உடல்களை புதைக்கப்பட்டிருந்தன. ஆற்றில் பிணங்கள் மிதந்து வந்த வண்ணம் இருந்தது. இதைத்தான் மும்பை மேயர் சுட்டுக்காட்டி பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.