செய்திகள்
மரணம்

நெல்லையில் வீடுகள் இடிந்து 2 பேர் பலி

Published On 2021-01-17 07:48 GMT   |   Update On 2021-01-17 07:48 GMT
நெல்லையில் வீடுகள் இடிந்து 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

சேரன்மகாதேவி அருகே உள்ள வடக்கு காருக்குறிச்சி கீழ் அஹ்ரகார தெருவை சேர்ந்தவர் லெட்சுமி (வயது85). இவர் தனது மகன் மற்றும் மருமகள், அவர்களது குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அவர்கள் வசித்து வந்த வீடு மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு குடும்பத்தினர் அனைவரும் வழக்கம் போல் தூங்க சென்றனர்.

இன்று அதிகாலை 5 மணிக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் லெட்சுமி படுகாயம் அடைந்தார். மற்ற 4 பேரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சேரன்மகாதேவி தீயணைப்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த லெட்சுமியை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

சுத்தமல்லி கோவில்பத்து தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 68). இவர் நேற்று அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாண்டியாபிள்ளை என்பவரது வீட்டு சுவர் திடீரென இடிந்து சுப்பையா மீது விழுந்தது.

இதில் படுகாயமடைந்த அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

Tags:    

Similar News