செய்திகள்
மின்சார ரெயில்

அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களும் மின்சார ரெயிலில் பயணிக்கலாம் - தெற்கு ரெயில்வே

Published On 2020-11-04 23:57 GMT   |   Update On 2020-11-04 23:57 GMT
அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களும் மின்சார ரெயில்களில் பயணிக்கலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மாநிலங்களுக்கு இடையே அவ்வப்போது சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் புறநகர் மின்சார ரெயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது.

அதே சமயத்தில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் புறநகர் மின்சார ரெயிலில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதே போன்று தங்களையும் மின்சார ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்கள் ரெயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களையும், மின்சார ரெயிலில் பயணிக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, தெற்கு ரெயில்வே தலைமை அலுவலக வர்த்தக துறையில் இருந்து சென்னை கோட்ட ரெயில்வே மேலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-

* அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள்.

* அரசு மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய பொருட்களை கையாளும் மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.

* அனைத்து கல்வி நிலையங் களிலும் பணியாற்றுபவர்கள்.

* தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள்.

* சரக்கு மற்றும் பயணிகளுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள்.

* குழந்தை நலம், மூத்த குடிமக்கள் நலம், சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளில் ஈடுபடும் சமூக சேவை செய்யும் அமைப்புகள்.

* அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்.

* பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் வக்கீல்கள் ஆகியோர் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அத்தியாவசிய பணி மற்றும் சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட எழுத்துப்பூர்வமான அங்கீகார கடிதத்தையும், அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையையும் பயணத்தின்போது காட்டவேண்டும்.

பயணம் செய்ய அனுமதிக் கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, புறநகர் சேவையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை சென்னை ரெயில்வே கோட்டம் எடுக்கலாம். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதாவது கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் புறநகர் ரெயில் சேவையை அதிகரிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News