உள்ளூர் செய்திகள்
சின்ன இசக்கி

தென்காசி டிரைவர் கொலையில் நண்பர் கைது

Published On 2022-01-22 09:06 GMT   |   Update On 2022-01-22 09:06 GMT
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள கீழஇலஞ்சியை சேர்ந்த இசக்கி என்ற சின்ன இசக்கி கொலையில், மதுபோதையில் தாக்கியதால், கொன்றதாக போலீசில் அவரது நண்பர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தென்காசி:

குற்றாலம் அருகே உள்ள கீழஇலஞ்சி காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் இசக்கி என்ற சின்ன இசக்கி. (வயது36). இவர் டிரைவராக  வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

சின்ன இசக்கி அந்த பகுதியில் சொந்தமாக புதிய வீடு ஒன்று கட்டிவருகிறார். நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டு முன்பு படுத்திருந்த சின்ன இசக்கி  நேற்று காலை முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுதொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் மாரிச்செல்வன் (வயது30) என்பவர் சின்ன இசக்கியை கொலை செய்தது தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நானும் சின்ன இசக்கியும் நண்பர்கள். அவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் நானும் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். தினமும் வேலையை முடித்துவிட்டு இரவில் 2 பேரும் மது அருந்துவோம்.

 நேற்றும் வழக்கம்போல் இரவில் மது அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே சின்ன இசக்கி என்னை அடித்தார். 

வீட்டுக்கு போகுமாறு அவதூறாக பேசினார். உடனே நான் வீட்டிற்கு சென்றுவிட்டேன். ஆனாலும் எனக்கு அவர் திட்டியது ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால் மீண்டும் அங்கு சென்றேன். அப்போது சின்ன இசக்கி மதுபோதையில் நன்றாக தூங்கிவிட்டார். அங்கு கிடந்த கட்டையால் சின்ன இசக்கியின் தலையில் பலமாக தாக்கினேன். 

அதன்பின்னும் ஆத்திரம் தீராததால் கடப்பாரையால் அவர் மண்டையில் அடித்தேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துவிட்டார் என்றார். இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
Tags:    

Similar News