செய்திகள்
பலியான ரஞ்சன், சுனிஷ்கா, தர்ஷன்.

மணலி-கொடுங்கையூர்-திருவள்ளூரில் மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுவர்கள்-சிறுமி பலி

Published On 2019-11-13 08:12 GMT   |   Update On 2019-11-13 08:12 GMT
மணலி, கொடுங்கையூர், திருவள்ளூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்கள், சிறுமி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர்:

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிரட்டி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம் அமைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்கள், சிறுமி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மணலி புதுநகர் அருகே உள்ள வெள்ளிவாயல் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மகன் ரஞ்சன் (வயது 12). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த வாரம் ரஞ்சனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்ட அவனை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சன் பரிதாபமாக இறந்தார்.

கொடுங்கையூர் சின்னான்டி மடம், கடும்பாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது 5 வயது மகள் கனிஷ்கா.

கடந்த ஒரு வாரமாக சிறுமி கனிஷ்காவுக்கு காய்ச்சல் இருந்தது. உடல்நிலை மோசமடைந்த அவளை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி கனிஷ்கா பரிதாபமாக இறந்தாள்.

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் மேயர் சிட்டிபாபு தெருவை சேர்ந்தவர் பிரபு தனியார் நிறுவன ஊழியர். இவரது 3 வயது மகன் தர்‌ஷன்.

கடந்த 3 நாட்களாக தர்‌ஷன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.

இந்நிலையில் நேற்று மாலை அவனது உடல் நிலை மேலும் மோசமானது. அங்கு சிகிச்சை பலனின்றி தர்‌ஷன் இறந்தான்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 92 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்தத்தை பரிசோதனை செய்ததில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்களை தனி வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Tags:    

Similar News