ஆன்மிகம்
சபரிமலையில் இன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு

சபரிமலையில் இன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு

Published On 2020-12-25 08:56 GMT   |   Update On 2020-12-25 08:56 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது.
திருவனந்தபுரம் :

சபரிமலைஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

இதற்காக கடந்த மாதம் 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு கொரோனா பிரச்சினை காரணமாக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதுபோல கோவிலில் நடைபெறும் பூஜைகளிலும் குறைந்த அளவே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்காக கடந்த 22-ந்தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து
சபரிமலை
க்கு தங்க அங்கி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்துவரப்பட்ட தங்க அங்கி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பம்பை செல்கிறது. அங்கிருந்து தங்க அங்கி சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது.

சன்னிதானத்தில் கோவில் தந்திரி மற்றும் மேல் சாந்தியிடம் ஆபரண பெட்டி ஒப்படைக்கப்படுகிறது. அதனை பெற்றுக்கொள்ளும் மேல்சாந்தி அதனை சாமிக்கு அணிவிக்கிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது.

இதையடுத்து நாளை மதியம் மண்டல பூஜைக்கான சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

மண்டல பூஜை விழாவை தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

ஜனவரி மாதம் 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது.
Tags:    

Similar News