செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: புதுச்சேரிக்கு வடக்கே இன்று மாலை கரையை கடக்கும்

Published On 2021-11-10 18:47 GMT   |   Update On 2021-11-11 01:10 GMT
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது கடலில் 60-70 கிலோ மீட்டர் வேகத்திலும், கரை பகுதியில் அதிகபட்சமாக 30 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று இரவு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நேற்று) மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில், புதுச்சேரிக்கு வடக்கே நாளை (இன்று) மாலை கரையை கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது கடலில் 60-70 கிலோ மீட்டர் வேகத்திலும், கரை பகுதியில் அதிகபட்சமாக 30 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே, காற்றினால் பாதிப்பு அதிகம் இருக்காது, மழை தான் அதிக அளவில் கிடைக்கும்.

நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் பதிவான அதிகபட்ச மழை அளவு எண்ணூரில் 5 சென்டி மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 4 சென்டி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 3 சென்டி மீட்டரும் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News