செய்திகள்
சாத்தான்குளம் அருகே புதுமாப்பிள்ளை திடீர் மாயம்
சாத்தான்குளம் அருகே புதுமாப்பிள்ளை திடீரென மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் காலனியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 30). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தூத்துக்குடி தெர்மல் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கிறிஸ்டோபரின் உடன் பிறந்தவர்கள் 5 பேர். அவர்களில் 4 சகோதரிகளுக்கு திருமணம் முடிந்து விட்டது.
இந்நிலையில் கிறிஸ்டோபருக்கு அவரது தாய் திருமண ஏற்பாடு செய்தார். அதன்படி அவருக்கும், கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நாளை (11-ந்தேதி) திருமணம் நடக்க இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முடிவெட்ட சலூன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்ற கிறிஸ்டோபர் பின்னர் வீடு திரும்பவில்லை. மாயமான அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. கிறிஸ்டோபர் மாயமானது குறித்து அவரது தாய் தேவகனி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குபதிந்து விசாரணை நடத்தி மாயமான கிறிஸ்டோபரை தேடி வருகிறார்.