குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து- போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் மயில்சாமி (வயது 37). இவர் சம்பவத்தன்று சேவூரில் இருந்து அவினாசி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். சிந்தாமணி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது போலீஸ்காரர் மயில்சாமி மது போதையில் இருந்தது தெரியவந்தது, இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பான விசாரணை அறிக்கையை அளிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மிட்டல் உத்தரவிட்டிருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் போலீஸ்காரர் மயில்சாமி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை போலீசூப்பிரண்டு திஷா மிட்டல் பிறப்பித்துள்ளார்.