செய்திகள்
டாஸ்மாக் கடை

டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு?

Published On 2021-05-05 06:40 GMT   |   Update On 2021-05-05 06:40 GMT
கொரோனா கட்டுப்பாடுகள் நாளை முதல் மேலும் தீவிரப்படுத்தப்படுவதால் டாஸ்மாக் கடை செயல்படும் நேரத்தை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நாளை முதல் அனைத்து கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடப்படுகிறது. தொற்று பரவல் காரணமாக பார்கள் மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை வழக்கமான நேரத்துக்கு திறக்கப்படுமா? அல்லது மூடப்படுமா என்ற கேள்வி மதுப்பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கொரோனா காலத்தில் டாஸ்மாக் வருமானம் குறைந்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதுக்கடைகள் கடந்தவாரம் முதல் மூடப்படுவதால் மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இத்தகைய சூழலில் கொரோனா கட்டுப்பாடுகள் நாளை முதல் மேலும் தீவிரப்படுத்தப்படுவதால் டாஸ்மாக் கடை செயல்படும் நேரத்தை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.

பகல் 12 மணிக்கு பிறகு மளிகை கடைகள், காய்கறி கடைகள் ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்படுவதால் மதுக்கடைகளை மட்டும் திறந்து வைப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடும்.

மதுக்கடைகள் மூலம் கொரோனா பரவாதா என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழக்கூடும். அதனால் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கலாமா என்று அரசு ஆலோசனை செய்கிறது.



4 மணிநேரம் மட்டுமே மது விற்பனை செய்துவிட்டு கடைகளை மூடுவது பற்றி உயர் அதிகாரிகளிடம் இன்று கலந்து ஆலோசிக்கப்படுகிறது.

ஆந்திராவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அங்குள்ள மதுக்கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசின் பொது நிறுவனங்கள் காலை 8 மணி முதல் 12 மணிவரை மட்டுமே செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகள் காலையில் திறந்து பகல் 12 மணிக்குள் மூடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News