விளையாட்டு
ஜோகோவிச்

ஜோகோவிச் விசாவை மீண்டும் ரத்து செய்ய முயற்சி - ஆஸ்திரேலிய அரசு தீவிர பரிசீலனை

Published On 2022-01-11 13:16 GMT   |   Update On 2022-01-11 13:16 GMT
ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் இருப்பதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தாலும் அவரை மீண்டும் நாடு கடத்துவதற்கான முயற்சிகளை ஆஸ்திரேலியா அரசு மேற்கொண்டுள்ளது.
மெல்போர்ன்:

ஒவ்வொரு ஆண்டும் 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகிறது. டென்னிஸ் போட்டிகளிலேயே மிகவும் முக்கியத்துவம் பெற்றது இந்த போட்டியாகும்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி வருகிற 17-ந் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகள் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் தடுப்பூசி விவகாரத்தில் தயக்கம் காட்டி வருவதால், இந்த போட்டியில் பங்கேற்பது குறித்து சந்தேகம் நிலவியது.

ஆஸ்திரேலிய ஓபனை 9 முறை வென்ற அவர் ஒட்டுமொத்தமாக 20 கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளது. பெடரர், நடாலுடன் இணைந்து அவர் முதல் இடத்தில் உள்ளார். ஜோகோவிச் 21-வது பட்டம் வென்று சாதனை படைக்க ஆஸ்திரேலிய ஓபன் அவருக்கு முக்கியமான போட்டியாகும்.

இதற்கிடையே தடுப்பூசி செலுத்தாத ஜோகோவிச்சுக்கு மருத்துவ ரீதியிலான விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதை ஜோகோவிச் ஆஸ்திரேலியா சென்றவுடன் தெரிவித்தார்.

ஆனால் இந்த வி‌ஷயத்தில் ஆஸ்திரேலியா தனது முடிவை மாற்றிகொண்டது. சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூறி அவரது விசாவை ரத்து செய்தது. ஆஸ்திரேலியா வந்த அவர் மெல்போர்ன் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். ஆஸ்திரேலிய குடியேற்ற துறையின் தடுப்பு காவல் மையமாக செயல்படும் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டார்.

இதற்கிடையே ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜோகோவிச் மெல்போர்ன் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஜோகோவிச்சின் விசா ரத்து நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய கோர்ட்டு தடை விதித்தது.

அதோடு தடுப்பு காவலில் இருந்து அவரை விடுவிக்கவும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஓட்டலில் இருந்து ஜோகோவிச் விடுவிக்கப்பட்டார். அவர் சென்ற இடம், எங்கு இருக்கிறார் என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் இருப்பதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தாலும் அவரை மீண்டும் நாடு கடத்துவதற்கான முயற்சிகளை ஆஸ்திரேலியா அரசு மேற்கொண்டுள்ளது.

அவரது விசாவை மீண்டும் ரத்து செய்ய ஆஸ்திரேலிய குடியுரிமை துறை மந்திரி தனது தனிப்பட்ட அதிகாரத்தை உபயோகிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அரசு தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நுழைய விசா ரத்து செய்யப்பட்டால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஜோகோவிச் ஆஸ்திரேலியா வர முடியாது.

ஆஸ்திரேலியாவில் அவர் தற்போது இருந்தாலும், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஆட அனுமதிக்கப்படுவாரா? என்று தெரியவில்லை.
Tags:    

Similar News