செய்திகள்
கொலை

நெய்வேலியில் வாலிபர் அடித்துக்கொலை

Published On 2021-04-04 13:54 GMT   |   Update On 2021-04-04 13:54 GMT
நெய்வேலியில் தைல மர தோப்பில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 14 பகுதியில் உள்ள தைல மர தோப்பில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு, அங்கிருந்த வர்களிடம் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர். 

விசாரணையில், அவர் நெய்வேலி வட்டம் 21 நாவலர் தெருவை சேர்ந்த வீரமணி மகன் சிவா என்கிற சிவக்குமார் (வயது 23) என்பதும், அவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் அவரை யாரோ மர்மநபர்கள் ஆயுதங்களால் அடித்துக் கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார் முன்விரோத தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News