செய்திகள்
கொரோனா தடுப்பூசி திருவிழாவை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்த காட்சி

திருப்பூரில் 21 இடங்களில் நடந்த முகாமில் 1,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-04-14 22:28 GMT   |   Update On 2021-04-15 07:18 GMT
தொழில் நகரான திருப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கொரோனா தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது
திருப்பூர்:

திருப்பூரில் 21 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 1,300 பேர் தடுப்பூசி நேற்று போட்டுக்கொண்டனர். நாளை (வெள்ளிக்கிழமை) வரை முகாம் நடக்கிறது.

தொழில் நகரான திருப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கொரோனா தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முககவசம் அணிந்து வீதியில் நடமாடவேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள். தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக நேற்று கொரோனா தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

நேற்றுகாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. 45 வயதுக்கு மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த பணியை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து டி.எஸ்.கே. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமையும் கலெக்டர் ஆய்வு செய்தார். மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று 202 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சி அலுவலகம் உள்பட 21 இடங்களில் கொரோனா தடுப்பூசி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. 42 குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர வாகனத்தில் சென்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) அதிகம் பேர் தடுப்பூசி போட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News