செய்திகள்
மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு? வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை அச்சம் காரணமாக நாட்டில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிகளவு தளர்வுகளால் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவிக்கப் போவதாக வைரல் வீடியோக்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், மத்திய அரசு மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை இதுவரை அறிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இவை ஜூன் 30 ஆம் தேதி முதல் இணையத்தில் வலம் வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. வீடியோவினை இணைய விஷமிகள் எடிட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.