செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மனு கொடுக்க வந்தபெருமாள்பட்டி காலனி பொதுமக்களை படத்தில்காணலாம்.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராமமக்கள் மனு

Published On 2020-11-10 09:50 GMT   |   Update On 2020-11-10 09:50 GMT
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள்கேட்டு கிராமமக்கள் மனு அளித்தனர்.
கரூர்:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கரூர் பெருமாள்பட்டி காலனி (வடக்கு) ஊர்பொதுமக்கள் வந்து, புகார் பெட்டியில் போட்ட மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பெருமாள்பட்டி காலனியில் (வடக்கு) வசித்து வருகின்றோம். எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் மற்றும் மின்சார வசதி உள்பட அப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம். எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

2013-ம் ஆண்டு டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சார்பில் புகார் பெட்டியில் போட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- 2013-ம் ஆண்டு டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 7 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு அரசு பணி வழங்கி உதவ வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியராக சேர அதிகபட்ச வயது 40 என்பதை தமிழக அரசு நீக்கம் செய்து, என்.சி.டி.இ. அறிவித்ததை இதற்கு முன்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்று அரசு ஆணை வழங்கி உதவ வேண்டும். 2013-ம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் வயது முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய ஆவனம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் பூசாரிகள் முன்னேற்றம் சங்கம் மற்றும் பூசாரிகள் பேரமைப்பு விசுவ இந்து பரிஷத் சார்பில் தனித்தனியாக தங்களது கோரிக்கைள் அடங்கிய மனுக்களை புகார் பெட்டியில் போட்டு சென்றனர்.
Tags:    

Similar News