ஆன்மிகம்
முத்து பல்லக்கில் மலைவலம் வந்த முருகன்

மயிலம் பங்குனி உத்திர விழா: முத்து பல்லக்கில் மலைவலம் வந்த முருகன்

Published On 2021-03-31 05:42 GMT   |   Update On 2021-03-31 05:42 GMT
மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் வள்ளி-தெய்வானை சமேத முருகன் எழுந்தருளி மலை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
மயிலத்தில் மயில்வடிவ மலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் திருக்கல்யாணம், தேரோட்டம், தீர்த்தவாரி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் நேற்று முன்தினம் இரவு முத்து பல்லக்கில் சாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் வள்ளி-தெய்வானை சமேத முருகன் எழுந்தருளி மலை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20-ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News