ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Published On 2019-12-16 05:52 GMT   |   Update On 2019-12-16 05:52 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் கடந்த 10-ந் தேதி 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது. மகா தீபம் வருகிற 20-ந் தேதி வரை தொடர்ந்து காட்சி அளிக்கும். தீபத் திருவிழாவின்போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

மேலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களும் கோவிலுக்கு அதிகளவில் வருவதால் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

மேலும் கோவிலில் பொது மற்றும் கட்டண வழியில் தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பொது தரிசனம் வழியில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேல் ஆனது. கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் போலீசார் உரிய வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, பக்தர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இன்றி வரிசையாக சென்று தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் போலீசார் தங்களுடன் வந்தவர்களை சாமி தரிசனத்திற்கு அழைத்து செல்வதிலேயே மும்முரமாக உள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.
Tags:    

Similar News