போடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணம் திருட்டு
மேலசொக்கநாதபுரம்:
போடியில் பிரதான சாலையில் அரண்மனை அருகே வசித்து வருபவர் செல்வராஜ். இவர் ஒரு மெடிக்கல் ஸ்டோரில் வேலை செய்து வந்தார். தற்போது குடும்பத்துடன் பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.
இதனால் இந்த வீட்டை போடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செல்வராஜின் உறவினர் பரமசிவம் பராமரித்து வந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பின் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். இது பற்றி போடி நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து தடயங்களை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.