செய்திகள்
ராகுல் காந்தி

காங்கிரஸ் சித்தாந்தத்தை பாஜக மறைக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2021-11-13 02:14 GMT   |   Update On 2021-11-13 02:14 GMT
இந்து மதம் வேறு, இந்துத்வா வேறு. இதுபோன்ற விஷயங்களை தான் நாம் வெளிப்படுத்த வேண்டும். இதை ஆழமாக புரிந்து கொண்ட 100, 200 அல்லது 500 பேரை செயலாக்கத்துக்கு பயன்படுத்த வேண்டும்.
மும்பை :

மராட்டிய மாநிலம் வார்தாவில் உள்ள சேவாகிராமம் ஆசிரமத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 4 நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் சித்தாந்தம் உயிர்ப்புடனும், துடிப்புடனும் உள்ளது. நமது சித்தாந்தம் அழகிய ஆபரணம். அதில் முடிவில்லாத ஆற்றல் உள்ளது. இது தான் நமது பலம். காங்கிரஸ் கட்சியின் அன்பு, பரிவு மற்றும் தேசிய அளவிலான சித்தாந்தத்தை
பா.ஜனதா
மறைத்துவிட்டது. ஊடகங்களும், தேசமும் முற்றிலுமாக கைப்பற்றப்பட்டுள்ளதால் அது மறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல நமது மக்களிடம் நாமே நமது கொள்கைகளை தீவிரமாக பரப்பாததாலும் மறைக்கப்பட்டு இருக்கிறது.

இந்து மதம் வேறு, இந்துத்வா வேறு. இதுபோன்ற விஷயங்களை தான் நாம் வெளிப்படுத்த வேண்டும். இதை ஆழமாக புரிந்து கொண்ட 100, 200 அல்லது 500 பேரை செயலாக்கத்துக்கு பயன்படுத்த வேண்டும்.

சீக்கியர்கள் அல்லது இஸ்லாமியர்களை இந்து மதம் தாக்குமா?. ஆனால் இந்துத்வாவாதிகள் அதை செய்வார்கள். இந்து மதம் மற்றும் இந்துத்வாவிற்கு வித்தியாசம் உள்ளது என நாங்கள் கூறுகிறோம். நீங்கள் இந்து என்றால் உங்களுக்கு இந்துத்வா ஏன் வேண்டும்?. இந்த புதிய பெயர் உங்களுக்கு எதற்கு?.

காங்கிரஸ் சித்தாந்தம் இந்தியாவில் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும். பா.ஜனதா அவர்களின் சித்தாந்தத்தை கண்டறிந்து அதில் உறுதியாக உள்ளனர். நாமும் நமது சித்தாந்தத்தில் உறுதியாக இருக்க வேண்டும். இதை நாம் செய்ய தொடங்கினால், அவர்களின் சித்தாந்தம் உறைபோட்டு மூடப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News