செய்திகள்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

3-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி: தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

Published On 2019-10-22 04:41 GMT   |   Update On 2019-10-22 04:41 GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதுடன், தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.
ராஞ்சி:

இந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 162 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்தியாவும் பாலோ-ஆன் கொடுக்க தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

முகமது ஷமியின் அபார பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. 36 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இதனால் 3-வது நாள் ஆட்டத்திற்குள் தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆகி டெஸ்ட் போட்டி முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. லிண்டே 27 ரன்களும், டேன் பீட் 23 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆகாமல் தப்பித்துக் கொண்டது. நேற்றைய ஆட்டநேர முடிவில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்திருந்தது.



இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் புரூயின்(30), நிகிடி(0) இருவரும், நதீம் ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, தென் ஆப்பிரிக்க அணி 133 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மிகப்பெரிய வெற்றி ஆகும்.

இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உமேஷ் யாதவ், நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி உள்ளது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 2வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News