செய்திகள்
பழனி அருகே வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை
பழனி அருகே வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பழனி:
பழனி அருகில் உள்ள மயிலாடும்பாறையை சேர்ந்தவர் முருகன். இவர் சுண்டல் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர். இன்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் முருகனுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் பழனி தாலுகா போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர் பீரோவை உடைத்து அதில் இருந்த 1½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் யாரேனும் சந்தேகப்படும்படியான நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.