தமிழ்நாடு
விபத்துக்குள்ளான டாஸ்மாக் லாரியில் இருந்து பீர்பாட்டில்களை அள்ளிச் செல்லும் பொதுமக்களை படத்தில் காணலாம்.

ஊத்தங்கரை அருகே லாரி கவிழ்ந்து விபத்து: பீர்பாட்டில்களை அள்ளிச்சென்ற பொதுமக்கள்

Published On 2022-01-15 05:25 GMT   |   Update On 2022-01-15 05:25 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பொதுமக்கள் பீர்பாட்டில்களை அள்ளிச்சென்றனர்.

மத்தூர்:

சென்னையில் இருந்து திருவண்ணாமலை வழியாக தருமபுரி நோக்கி டாஸ்மாக் மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் தனுஷ் (வயது 42), என்பவர் ஓட்டினார். கிளீனராக இளையராஜா (38) என்பவர் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி ரோட்டில் கவிழ்ந்தது

இதில் லாரியில் இருந்த பீர்பாட்டில்களில் பெரும்பாலானவை உடைந்து சேதமடைந்தது. இதனால் அங்கு பீர்பாட்டில்கள் உடைந்து ஆறாக ஓடியது. மேலும் அந்த வழியாக சென்ற சிலர், லாரியில் மீதமிருந்த பீர்பாட்டில்களை வேக வேகமாக அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் அங்கிருந்த குடிமகன்கள் சிலர், இதனை சாதகமாக பயன்படுத்தி பீர்பாட்டில்களை எடுத்து கொண்டு தங்களது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதை பார்த்து அங்கு நின்ற சிலர் திகைத்து போய் நின்றனர்.

இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஊத்தங்கரை போலீஸ் டி.எஸ்.பி. அலெக்சாண்டர், சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் லாரியில் இருந்த பீர்பாட்டில்களை அள்ளியவர்களை விரட்டியடித்தனர்.

இதில் லாரியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பீர்பாட்டில்கள் உடைத்து சேதமானதாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News