உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே பரபரப்பு நள்ளிரவில் கணவன் மனைவியை தாக்கிய 10 பேர் கும்பல்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே நள்ளிரவில் கணவன் மனைவியை தாக்கிய 10 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர். இவரது மனைவி செரீனா(வயது 33).
இந்த நிலையில் நேற்று மாலை திருப்பத்தூர் மாவட்டம் கோட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (23) என்ற வாலிபர், தனது நண்பன் அருணை பார்ப்பதற்காக மத்தூர் முத்து நகருக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது வரும் வழியில் அவர், சிக்கந்தர் வீட்டு முன்பு அசுத்தம் செய்ததாக வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த சிக்கந்தர் , வெங்கடேசனை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், சிக்கந்தரை தாக்கினார். மேலும் இதை தடுக்க வந்த செரீனாவையும் தாக்கினார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி சென்று விட்டார்.
இதையடுத்து நள்ளிரவில் வெங்கடேசன், தனது ஊரில் இருந்து 9 பேர் கொண்ட கும்பலை அழைத்து வந்தார். பின்னர் அவர்கள், சிக்கந்தரிடம் தகராறு செய்தனர். திடீரென அவர்கள் ஆத்திரத்தில் சிக்கந்தர், அவரது மனைவி செரீனா ஆகியோரை கண்மூடித்தனமாக சரமாரியாக தாக்கினர். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்து கூச்சல் போட்டனர்.
இதனால் சத்தம் கேட்டு ஊர்மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள், வெங்கடேசன் உள்பட 10 பேர் கும்பலை விரட்டி பிடித்தனர். பின்னர் அவர்களை மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து மத்தூர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (23), விக்னேஷ் (22), சக்தி(23), விஜய்(19), திருப்பதி (18), சஞ்சய் (19), லோகநாதன் (23), நடராஜன் (30) மற்றும் மத்தூர் முத்துநகரை சேர்ந்த அருண் (21) ஆகிய 10 பேர் என தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 10 பேரையும் மத்தூர் போலீசார் கைது செய்தனர். நள்ளிரவில் கணவன் மனைவியை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் மத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.