செய்திகள்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி :
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்த வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. திகார் சிறையில் இருந்து காவலர்கள் ப.சிதம்பரத்தை வாகனத்தில் ஏற்றி கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
அப்போது, ப. சிதம்பரத்தினை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. திகார் சிறைக்கு அமலாக்க துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அனுமதி அளித்துள்ளது.
அவரை பொதுமக்கள் முன்னிலையில் விசாரிப்பதோ அல்லது கைது செய்வதோ அவரின் கண்ணியம் சார்ந்த விசயம் ஆகாது என்றும் அமலாக்க துறையினரிடம் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.