செய்திகள்
திருப்பூரில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது
மசாஜ் சென்டர் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து வீட்டில் விபசாரம் நடத்தியது தெரியவந்தது.
திருப்பூர்:
திருமுருகன் பூண்டி கூத்தம்பாளையம் ஜே.பி. நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி ஆண்கள் பலர் வந்து செல்வதாகவும் பெண்கள் சிலர் உள்ளே இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் மாநகர போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின்படி துணை கமிஷனர் அரவிந்த், வடக்கு உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், ஆனந்த் மற்றும் தனிப்படை போலீசார் கூத்தம்பாளையத்தில் உள்ள அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 45,25,29 வயதான 3 பெண்கள் இருந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்களை திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபடுத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தனர்.
இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்ததுடன் 3 பெண்களையும் மீட்டனர். மேலும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பல்லடம் அருள்புரத்தை சேர்ந்த வசந்த் (வயது 41),தேனி மாவட்டம் சித்தார் பட்டியை சேர்ந்த விக்னேஷ் (21) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மசாஜ் சென்டர் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து வீட்டில் விபசாரம் நடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மீட்கப்பட்ட 3 பெண்களையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.