செய்திகள்
மழை

அருப்புக்கோட்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை

Published On 2021-08-21 10:46 GMT   |   Update On 2021-08-21 10:46 GMT
குமரன் புதுத்தெரு, காந்தி மைதானம், டெலிபோன் ரோடு, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீரோடு கலந்து சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பாலையம்பட்டி:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரும் 23-ந் தேதி வரை மழை பெய்யும் பகுதிகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்தது. அருப்புக்கோட்டை பாலையம்பட்டி, ஆத்திபட்டி, சொக்கலிங்கபுரம், புளியம்பட்டி, ராமசாமிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

அதனை தொடர்ந்து காலை வேளையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. காலையில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

குமரன் புதுத்தெரு, காந்தி மைதானம், டெலிபோன் ரோடு, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீரோடு கலந்து சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

முறையான திட்டமிடல் இன்றி சாலை அமைப்பதே இதுபோன்று சிரமத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பின் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் ஆடி பட்டத்தில் நிலத்தை உழுது மழைக்காக காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் சாத்தூர், விருதுநகர், மதுரை மாவட்டம் திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்தது.
Tags:    

Similar News