திருமங்கலத்தில் அரசு அதிகாரி உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலி
திருமங்கலம்:
மதுரை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.
திருமங்கலம் பகுதியில் கடந்த 3 வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
சில நாட்களுக்கு முன்பு திருமங்கலம் போக்கு வரத்துக்கழக பணிமனையில் வேலை பார்த்து வந்த கிளீனர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் 2 பேர் திருமங்கலம் பகுதியில் பலியாகினர்.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் கொரோனா கட்டுப்பாடு பகுதிகளை ஏற்படுத்தி தீவிரமாக கண்காணித்தது. மேலும் முக கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.
இந்த நிலையில் திருமங்கலம் அரசு போக்குவரத்து அதிகாரி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் திருமங்கலம் பகுதியில் கேபிள் டி.வி. நடத்தி வந்த ஒருவர் மற்றும் ஒரு பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் பலியானோர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.