செய்திகள்
மூதாட்டியிடம் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
மூதாட்டியிடம் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட கடலி கிராமத்தை சேர்ந்தவர் மங்களம்(வயது 70). இவர் கடந்த 11-ந் தேதி கடலி மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் மூதாட்டி கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். அவர்களை குத்தாலம் போலீஸ் ஏட்டு சுரேஷ் துரத்தி சென்று மடக்கி பிடித்தார். அப்போது ஒருவன் தங்க சங்கிலியுடன் தப்பி ஓடி விட்டான். இதையடுத்து, பிடிபட்டவனை பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவன் வைத்தீஸ்வரன் கோவிலை சேர்ந்த குணசேகரன் மகன் முத்தழகன் என்பதும், தப்பி ஓடியவன் மயிலாடுதுறை திருவிழந்தூர் வடக்கு ஆராய தெருவை சேர்ந்த சேகர் மகன் இளையராஜா (வயது 21) என்பதும், இருவரும் மோட்டார் சைக்கிள்களை திருடி, அதில் சென்று வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கொள்ளையனை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையனை தேடி வந்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே நீடுரில் பதுங்கி இருந்த இளையராஜாவை பிடித்தனர். பின்னர் அவனிடம் இருந்து 2½ பவுன் சங்கிலி மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளையராஜவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.