செய்திகள்
பலியான பள்ளி மாணவன் ஆகாஷ்

செங்கல்பட்டு அருகே பாலாற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2019-12-03 07:32 GMT   |   Update On 2019-12-03 07:32 GMT
செங்கல்பட்டு அருகே பாலாற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அருகே உள்ள பாலூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். ஆட்டோ டிரைவர். இவரது மகன் ஆகாஷ் (வயது14).

அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று பள்ளி விடுமுறை என்பதால் ஆகாஷ் நண்பர்களுடன் வெளியே விளையாட சென்றான். பின்னர் அனைவரும் அங்குள்ள பாலாற்றில் குளித்தனர்.

அப்போது ஆகாஷ் தண்ணீரில் சிக்கி மூழ்கினான். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதுபற்றி ஆகாசின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் தேடியும் ஆகாசை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை மீண்டும் தேடும் பணி நடந்தது. அப்போது அதே இடத்தில் ஆகாசின் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

குன்றத்தூரை அடுத்த பழதண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி (வயது 17) பிளஸ்-2 மாணவன். இவர் நண்பர்களுடன் சோமங்கலம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்குள் மீன்பிடி படகில் சென்றார்.

அப்போது கார்த்தி தண்ணீரில் இறங்கினார். இதில் அவர் மூழ்கினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் சென்று தண்ணீரில் மூழ்கிய கார்த்தியை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News