ஆன்மிகம்
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் கருட சேவை உற்சவம்

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் கருட சேவை உற்சவம்

Published On 2021-09-18 07:37 GMT   |   Update On 2021-09-18 07:37 GMT
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசுவாமி எழுந்தருளி கோவிலின் உட்புறத்தில் வீதிஉலா நடைபெற்று வருகிறது.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு சித்திரை பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. இதற்கு பதிலாக கடந்த 12-ந்தேதி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசுவாமி எழுந்தருளி கோவிலின் உட்புறத்தில் வீதிஉலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் காலையில் சாமிக்கு மோகன அவதார அலங்காரம் செய்யப்பட்டு, தங்கப்பல்லக்கில் கோவில் பின்புறத்தில் உள்ள வாகன மண்டபத்தில் கருட சேவை உற்சவம் நடைபெற்றது.

பின்னர் நேற்று காலை முக்கிய விழாவான உதய கருடசேவை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் தேவநாதசாமி கருடன் மீது அமர்ந்து அருள் பாலித்தார். அரசின் உத்தரவு காரணமாக சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் வெளியில் நின்று சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்து சென்றனர். இதேபோல் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்றும், நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் அறிவித்தனர்.

Tags:    

Similar News