வழிபாடு
சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

திருச்செந்தூரில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்தில் வீதி உலா

Published On 2022-02-10 06:25 GMT   |   Update On 2022-02-10 06:25 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் 3-ம் நாளில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 3-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 7 மணியளவில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை அடைந்தனர். பின்னர் மாலை 6.15 மணியளவில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

4-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் உலா வருகிறார்கள்.விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News