செய்திகள்
பிரான்ஸ் அதிபர் கூறியதாக வைரலாகும் தகவல்
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என பிரான்ஸ் அதிபர் தெரிவித்ததாக கூறும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை வீட்டில் இருக்க உத்தரவிட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே தகவலை சில செய்தியாளர்களும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
"இனியும், என் உயிரை தியாகம் செய்யும் எண்ணம் இல்லை. தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பவர்களுக்காக என் மகள்களின் இளமை மற்றும் கல்வி கற்கும் உரிமையை விட்டுக் கொடுக்கப்போவதில்லை." என மேக்ரான் தெரிவித்ததாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்த இணைய தேடல்களில் பிரான்ஸ் அதிபர் இதுபோன்ற கருத்தை தெரிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில், மேக்ரானிற்கு குழந்தைகளே இல்லை. மேக்ரானின் மனைவிக்கும் அவரது முந்தைய கனவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன. இவர்களில் அனைவரும் 35 வயதை கடந்தவர்கள் ஆவர்.
மேலும் வைரல் பதிவுகளில் உண்மையில்லை என பலர் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். இத்துடன் முன்னதாக இதே தகவலை முழுமையாக உறுதிப்படுத்தாமல் பதிவிட்டதற்கு தனியார் ஊடக நிறுவன செய்தியாளர் மன்னிப்பு கேட்கும் வகையில் ட்வீட் செய்து இருக்கிறார். அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் கூறியதாக வைரலான தகவல்களில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.