தொழில்நுட்பம்
திடீரென முடங்கி போன கூகுள் சேவைகள் சீராக்கப்பட்டன
கூகுள் நிறுவனத்தின் சில சேவைகள் உலகம் முழுக்க திடீரென முடங்கி போன நிலையில், தற்சமயம் இவை சீராக்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.
இணைய உலகில் பிரபல தேடுபெறி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் டிரைவ் உள்ளிட்டவை திடீரென முடங்கி போனது. இதனால் உலகம் முழுக்க பலர் இந்த சேவைகளை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
திடீர் முடக்கம் காரணமாக ஜிமெயிலை லாக்-இன் செய்யவோ, செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை. மேலும் கூகுள் மீட் செயலியில் ரெக்கார்டிங் செய்யவோ, கூகுள் டிரைவில் ஃபைல்களை உருவாக்கவோ, கூகுள்சாட்டில் செய்திகளை அனுப்பவோ முடியாமல் போனது.
இதனால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து கூகுள் நிறுவனத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன. மேலும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து நெட்டிசன்கள் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி கவலைகளை பகிர்ந்தனர். இது சர்வதேச அளவில் வைரலானது.
இந்நிலையில், முடங்கிப்போன கூகுள் சேவைகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது. முன்னதாக பாதிக்கப்பட்ட கூகுள் சேவைகளின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
சேவைகளுக்கு ஏற்பட்ட திடீர் தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து சீரான சேவையை வழங்குவதே கூகுளின் குறிக்கோள் ஆகம். நாங்கள் தொடர்ந்து எங்களின் சேவைகளை மேம்படுத்த பணியாற்றி வருகிறோம் என கூகுள் தனது ஜிசூட் ஸ்டேட்டஸ் டேஷ்போர்டில் தெரிவித்து இருக்கிறது.