செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா சிகிச்சை தீவிரம்- 846 மினி கட்டுப்பாடு பகுதிகளில் கண்காணிப்பு

Published On 2021-04-04 09:23 GMT   |   Update On 2021-04-04 09:23 GMT
கொரோனா பரவுவதை தடுக்க முககவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் பலர் அதை கடைபிடிக்காமல் உள்ளதால், கொரோனா மிக வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

தேர்தல் காலமாக இருப்பதால் பல இடங்களில் அரசியல் கட்சியினர் கூட்டம், கூட்டமாக வந்து செல்வதால் கொரோனா பரவுவது மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவுவதை தடுக்க முககவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் பலர் அதை கடைபிடிக்காமல் உள்ளதால், கொரோனா மிக வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 3446 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1290 பேரும், கோவையில் 292 பேரும், செங்கல்பட்டில் 285 பேரும், திருவாரூரில் 201 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 96 ஆயிரத்து 226 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பல பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாலும் இன்னும் 20 ஆயிரத்து 204 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவுக்கு நேற்று மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 8 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னையில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் உள்ள முக்கியமான அம்சங்கள் வருமாறு:-

எங்காவது ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டதால் அந்த பகுதியை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரமும் தெரிவிக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தகுதியானவர்களை வீட்டில் தனிமைப்படுத்த டாக்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவைக்கு அதிகமாக படுக்கை வசதிகள், ஆக்சிஜன் கருவிகள், மருந்துகள், பாதுகாப்பு கவசங்கள் தயார் நிலையில் இருப்பதை ஒவ்வொரு கலெக்டரும் உறுதிபடுத்த வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை இங்கு 31 லட்சத்து 75 ஆயிரத்து 349 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஏப்ரல் 3-ம் தேதி வரை 54 லட்சத்து 78 ஆயிரத்து 720 டோஸ் தடுப்பூசி வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News