ஆன்மிகம்
சிவன்

ஈசனின் அருள்பெற உதவும் புரட்டாசி பவுர்ணமி விரதம்

Published On 2020-10-01 03:27 GMT   |   Update On 2020-10-01 03:27 GMT
புரட்டாசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானை விரதம் இருந்து வழிபடுவது, பலவித பாவங்களைப் போக்கும் என்று புராணக் கதை கூறுகிறது. மேலும் லட்சுமியின் கடாட்சத்தையும் பெறலாம்.
சித்திரை முதல் தொடர்ந்து பன்னிரண்டு மாதங்களிலும் வரும் பவுர்ணமி திருநாளில், சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் வரும் பவுர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் லட்சுமியின் கடாட்சத்தையும் பெறலாம் என்கிறார்கள். இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கான கூடுதல் சிறப்பாகும். புரட்டாசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானை விரதம் இருந்து வழிபடுவது, பலவித பாவங்களைப் போக்கும் என்று புராணக் கதை கூறுகிறது.

கிருச்சமதர் என்ற முனிவர் விநாயகப்பெருமானின் மிகச் சிறந்த பக்தர். அவர் விநாயகப் பெருமானை நோக்கி கடுந்தவம் இருந்தார். அவர் தவம் இருந்ததன் பலனாக விநாயகரை தரிசிக்கும் பெரும் பேறு பெற்றார். விநாயகரிடம் இருந்து பல வரங்களையும் பெற்றுக் கொண்டார். அந்த வரத்தின் மூலமாக, சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் அழிக்க முடியாத ஒரு மகனை, தன்னுடைய சக்தியால் பெற்றார்.

அவ்வாறு அவர் பெற்ற மகனின் பெயர் பலி. கிருச்சமதர் முனிவரைப் போலவே பலியும், விநாயகர் மீது அளவு கடந்த பக்தி கொண்டான். பலியும் பிள்ளையாரை வழிபட்டு மூன்று உலகங்களையும் அடக்கியாளும் வல்லமையை தனக்கு தந்தருள வேண்டும் என்பது உள்பட பல வரங்களைப் பெற்றுக் கொண்டான். மேலும், அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான மூன்று உலோக கோட்டைகளை கொடுத்து விநாயகர் அருள்புரிந்ததுதான்.

வரங்களை கொடுத்த பிள்ளையார், பலியை எச்சரிக்கை செய்தார். “நான் வழங்கிய வரங்களைக் கொண்டு நீ தவறான பாதையில் சென்றால் சிவபெருமானின் திருக்கரத்தில் உள்ள கணை ஒன்றினால் உன்னுடைய கோட்டைகள் அழியும்” என்றார். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் ஆணவத்தால் மூவுலகங்களையும் துன்புறுத்தினான், பலி. திரிபுரங்களுக்கும் அதிபதியான அந்த அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத தேவர்களும், முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர். அவர்களைக் காத்தருள திருவுளம்கொண்ட பிள்ளையார், பலி என்ற திரிபுரனுடன் போர் தொடுக்க முடிவெடுத்தார்.

அதற்காக விநாயகர் அந்தணர் வேடமிட்டு பலியிடம் சென்று “திருக்கயிலையில் இருக்கும் சிந்தாமணி விநாயகரின் திருவுருவத்தை எனக்கு எடுத்துத் தர வேண்டும்” என்று கேட்டார். பலியும் அதற்கு சம்மதம் தெரிவித்து சிவபெருமானிடம் சென்றான். ஆனால் சிவபெருமான் விநாயகர் உருவத்தை தர மறுத்ததுடன், தன்னுடன் போர் புரிந்து அதை எடுத்துச் செல்லும்படி கூறினார். சிவபெருமானுக்கும், திரிபுரனுக்கும் போர் நடந்தது. போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பலியின் மீது சிவ கணை பாய்ந்தது. திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றிக் கலந்தான். அவ்வாறு அவன் வீடுபேறடைந்த தினம், புரட்டாசி மாத பவுர்ணமி நாளாகும். அந்த நாளை ‘பாகுளி’ என்று அழைப்பார்கள். இந்தப் புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களைத் துன்பங்கள் நெருங்காது.

புரட்டாசி பவுர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். நண்பகலில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை பிரதோஷ வேளையில் சிவனை வழிபாடு செய்தால், சிவ பெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்பதே புரட்டாசி மாத பவுர்ணமி நாளின் சிறப்பாகும்.

புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்குமாம். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தினுடைய அமுதமாய் விளங்குபவள். இதனால் அன்னைக்கு ‘சந்திர மண்டல மத்யகா’ என்ற திருநாமம் உண்டு. ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு காலம். இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும். எனவே புரட்டாசி மாதத்தின் பவுர்ணமி என்பது அம்பிகையின் பிரகாசம் ஆகும். இந்தக் கோடி சந்திரபிரகாசத்தை சவுந்தர்ய லஹரியில் அம்பிகையின் சவுந்தர்யத்தை “உன்னுடைய புன்முறுவல் அமுதம் போன்றது.

உன் முகமாகிய சந்திரனிடமிருந்து பெருகும் அந்த அமுதம் போன்ற நிலவுக் கதிர்களை உண்ணும் பறவைகளுக்கு, அந்த அமுதத்தின் தித்திப்பு திகட்டவே அவறின் அலகுகள் உணர்ச்சி இழந்ததாக ஆகிவிட்டன. ஆகையால் அப்பறவைகள் ருசி மாற்றம் வேண்டி புளிப்பில் ஆசை கொண்டு குளிர்ந்த கதிர்கள் கொண்ட சந்திரனின் நிலவாகிய அமுதப் பெருக்கைப் புளித்த கஞ்சி என்று எண்ணி வேண்டிய மட்டும் இரவு தோறும் நிறைய பருகுகின்றன” என்று ஜகத்குரு ஆதிசங்கரர் கூறியிருப்பதாக, மகா பெரியவர் குறிப்பிடுகிறார்.

புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.

இந்நாளில் விரதம் இருப்பவர்கள், இரவில் குறைவான எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஆகாரத்தை உண்ண வேண்டும். இவ்வாறு உண்டால் நள்ளிரவில் தியானம் செய்வதற்கும், பிராணாயாமம் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும். இந்தச் சக்தியை நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கு மேலும் மேலும் இறைவனின் அருள் கிடைக்கும். இப்படிபட்டவர்களுக்கு நல்ல உடல் பொலிவும், நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தியும் கிடைக்கும். இவர்கள் எந்த காரியத்தைத் தொடங்கினாலும் அதில் வெற்றி வந்து சேரும்.
Tags:    

Similar News