செய்திகள்
கர்நாடகத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது - ஒகேனக்கல் மடம் சோதனை சாவடியில் சிக்கினார்
கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் ஒகேனக்கல் மடம் சோதனைசாவடியில் கைது செய்யப்பட்டார்.
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மடம் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒகேனக்கல் இந்திராநகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெய்சங்கர் (வயது 30) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் 100 கர்நாடகா மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் காவிரி ஆற்றின் மறுபுறம் அமைந்துள்ள கர்நாடக எல்லை பகுதியான மாறுகொட்டாய் பகுதியில் இருந்து காவிரி ஆற்றை கடந்து கடத்தி வந்து பென்னாகரம் பகுதியில் விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
காரிமங்கலம் போலீசார் நேற்று கும்பாஅள்ளி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்திய போது சேலம் மாவட்டம் வேடுகாத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த அறிவுமணி (26), ஸ்ரீநிவேஸ் (22), தர்மபுரி மாவட்டம் பழைய தர்மபுரி பகுதியை சேர்ந்த தனசேகர் (27), விஜயகுமார் (25) ஆகிய 4 பேர் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 200 மது பாக்கெட்டுகள், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
நல்லம்பள்ளி அடுத்த நூலஅள்ளி கிராமத்தில் போலீசார் ேசாதனை நடத்தினர். அப்போது கோவிந்தராஜ் என்பவரின் வீட்டுக்கு பின்புறம் கர்நாடக மது பாக்கெட்டுகள் பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. உடனே போலீசார் கோவிந்தராஜை கைது செய்து அவரிடம் இருந்து 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.